ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று (3) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் பொதுச் சதுக்கத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துவதை ஈரானிய அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு செய்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் “அமெரிக்காவுக்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” மற்றும் “சரணடைய மாட்டோம்” என ஆவேசமாகக் கோஷமிட்டனர்.
அமெரிக்காவுக்கு மரணம் , இஸ்ரேலுக்கு மரணம்
பெண்கள் பாடசாலை இலக்கு வைக்கப்பட்டதற்கு இஸ்ரேலே காரணம் என ஈரானிய அரச ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இருப்பினும், குறித்த பகுதியில் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவினால் எவ்விதத் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாகத் தங்களுக்குத் தெரியவில்லை என இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.