NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு!
இரண்டு ஜப்பானிய பிரஜைகள் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஜப்பான் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரானிய அதிகாரிகள்
மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நிலவரப்படி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜப்பான் அரசாங்கம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் தெஹ்ரானில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்ட NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் என நம்பப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்தத் தடுப்புக்காவல் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து ஜப்பான் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.