பற்றி எரியும் வளைகுடா.. இலங்கையின் தலையீடு அச்சுறுத்தலாக அமையுமா! – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் ஈடுபாடு பெரும் அச்சுறுத்தலாக அமையுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் திடீரென இடம்பெற்ற ஜனாதிபதியின் உரையின் போது ஊடகவியலாளர் ஒருவர், ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் தலையீடு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, “நாம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உட்பட்டே செயற்படுகிறோம். இச்சம்பவங்கள் எமது கடல் எல்லையிலேயே நடப்பதாகச் சிலர் கூறினர். அவை உண்மையல்ல.
அரசியல் சதிகள்..
ஈரான் கப்பல் மீதான தாக்குதல் எமது கடல் எல்லைக்கு அப்பால், ஆனால் எமது பொருளாதார வலயத்திற்கு (EEZ) உட்பட்ட பகுதியில் நடைபெற்றது.
அந்தப் பகுதியில் நடக்கும் விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், அதைத் தமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்ற மிகவும் கீழ்த்தரமான, குறுகிய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் கட்சிகளே இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் நிலை உருவான போதும் அதைப் பயன்படுத்திப் பொய்ப் பிரசாரங்கள் செய்யப்பட்டன.
அதேபோல், அமெரிக்கா பல நாடுகளுக்கு மேலதிக வரி விதித்த போதும் இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘டித்வா’ சூறாவளியின் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பெருமளவிலான வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் பல பொய்கள் பரப்பப்பட்டன.
Hague உடன்படிக்கை
சர்வதேச ரீதியிலோ அல்லது உள்நாட்டிலோ, அது இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் சரி, எந்தவொரு சம்பவத்தையும் தமக்குச் சாதகமாக எவ்வாறு மாற்றுவது என்றே இந்த அரசியல் குழுக்கள் சிந்திக்கின்றன. இது குறித்து நாம் வருந்துகிறோம்.
இது எவ்விதத்திலும் ஒரு தரப்பிற்கு இராணுவ ரீதியாக வழங்கப்பட்ட ஆதரவு அல்ல. எமது கடல் எல்லைக்கு அருகில் ஆபத்தில் இருந்த பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கை மத்திரமே.
நாம் ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின்படி இது நாம் பின்பற்ற வேண்டிய ஒரு நடைமுறை. இதேபோல் பாதிப்புக்குள்ளாகும் எந்தவொரு தரப்பினருக்கும் நாம் இந்த நடைமுறையையே பின்பற்றுவோம்.
நாம் ஹேக் (Hague) உடன்படிக்கை மற்றும் நாம் கைச்சாத்திட்டுள்ள கடல் சார் வளங்கள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறோம். உண்மையில், நாம் கைச்சாத்திட்டுள்ள சாசனங்களின்படி செயற்படவில்லை என்றால் தான் அது கேள்விக் குறியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.