செங்கலடியில் 45 இலட்சம் ரூபாய் திருட்டு; கைவிரலால் சிக்கிய நபர்
மட்டக்களப்பு, செங்கலடி வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரால் பெறப்பட்ட கைவிரல் அடையாளங்கள் (Fingerprints)புலனாய்வுப் பிரிவினருக்கு பெரும் உதவியாக அமைந்தன.
சோதனையின்போது, சேகரிக்கப்பட்ட கைவிரல் அடையாளங்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரின் அடையாளங்களுடன் ஒத்துப்போனதையடுத்து பொலிஸார் இந்த அதிரடி கைதை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது ஏறாவூர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.