;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

0

video link-

https://fromsmash.com/m44t1z5GPp-dt

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

பாறுக் ஷிஹான்-

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது இன்றைய சபை நடவடிக்கைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 06 பேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுலைமான் சாபியும் கலந்து கொண்ட நிலையில் போதியளவு கோரம் உள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய புதிய தவிசாளர் தெரிவின் போது பார்வையாளர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அஸ்ரப் தாஹிர் உட்பட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் சீரற்ற நிலையில் காணப்பட்ட போதிலும் புதிய தவிசாளரின் தெரிவானது நம்பிக்கை அளிப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த காலங்களில் இரு முறை இடமபெற்ற சபை அமர்வுகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் உறுப்பினர்கள் புதிய தவிசாளர் தெரிவில் பல்வேறு காரணிகளால் கலந்து கொள்ளாமையால் சபையில் உரிய கோரம் இன்றி இழுபறி நிலை புதிய தவிசாளர் தெரிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் சீரற்று காணப்பட்டதாக சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் இடமிருந்தும் பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் வெளியாகி இருந்தன.

மேலும் முன்னாள் தவிசாளராக செயற்பட்ட ஆதம்பாவா அஸ்பரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட தவிசாளர் பதவி வெற்றிடத்தை அடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் பின்னர் நடைபெற்ற இரு அமர்வுகளிலும் பல காரணிகளால் புதிய தவிசாளர் தெரிவு நடைபெறவில்லை . அத்துடன் குறித்த பிரதேச சபையில் பல கட்சிகள் கொண்ட உறுப்பினர்கள் இருப்பதால் புதிய தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்ற விடயத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையின்மை ஏற்பட்ட நிலையில் இரு முறை புதிய தவிசாளருக்கான தெரிவு நடைபெறாது இழுபறியாகி வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர சபையில் பல கட்சி உறுப்பினர்களின் வருகை சீரற்ற நிலையில் காணப்பட்டமையால் உரிய கோரம் இன்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாமல் ஒத்திவைக்கப்பட்ட சபையின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உரிய காலத்தில் முன்வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் புதிய தவிசாளர் தெரிவு நடைபெறும் வரை நிர்வாகப் பொறுப்புகளை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மேற்கொள்ள ஆளுநரின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று இறுதியாக புதிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றதிலிருந்து அச்சபைக்கான தவிசாளரை தெரிவு செய்வதில் ஏற்பட்ட இழுபறிகள் கட்சிகள் சார்பில் துரோகங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்றவற்றால் கடந்த பல மாதங்களாக தவிசாளர் தெரிவு பிற்போட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.