;
Athirady Tamil News

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை

0

இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இணையவழி கருத்தரங்குகள் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத் தொடர்புகள் நிறைந்த சூழலிலேயே அமைய வேண்டும்
கல்வி உளவியலின்படி, 3-5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் கற்றல் செயல்பாடுகள், செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகத் தொடர்புகள் நிறைந்த சூழலிலேயே அமைய வேண்டும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

திரையைப் பார்த்து கல்வி கற்கும் சிறுவர்களின் சமூகத் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் குறைவடைவதற்கும், ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் தடையாக அமைவதற்கும் இது காரணமாகிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அரசாங்கம் மற்றும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளின்படி, முன்சிறுவர் பருவ வளர்ச்சியின் போது குழந்தை சூழலுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

சிறுவர்களை அதிகளவில் தொழில்நுட்பக் கருவிகளுக்கு உட்படுத்துவது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மூளை வளர்ச்சிக்குத் தீங்கானது என்பதால், இத்தகைய வயதுப் பிரிவினருக்கு இணையவழி வகுப்புகளை நடத்துவதை அமைச்சு அங்கீகரிக்கவில்லை.

அதோடு வர்த்தக நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான கருத்தரங்குகளால் சிறுவர்களின் கல்வித் தரம் உயராது எனவும், அது அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாக அமையும் எனவும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

எனவே, பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு குழந்தையின் சிறந்த ஆசிரியர் சூழலும் நேரடி அனுபவங்களுமே தவிர டிஜிட்டல் திரை அல்ல என்றும் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, பிள்ளைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோராக அதிக அவதானம் செலுத்தி செயற்படுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.