;
Athirady Tamil News

அமெரிக்க அதிபரா? சர்வாதிகாரியா? டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் 250-ஆம் ஆண்டு விடுதலை நாள் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிடப்பட உள்ள தங்க நாணயத்தில் டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உயிருடன் உள்ள அதிபர் படம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருக்கக்கூடாது என்று அமெரிக்க ஃபெடரல் சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கடந்த 1926-இல் அமெரிக்காவின் 30-ஆவது அதிபரான கால்வின் கூலிட்ஜ் தம் படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை அமெரிக்கா விடுதலை அடைந்ததன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிட்டிருந்தார். அந்த நாணயங்களில் மறைந்த அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அருகில் கால்வின் இருப்பது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க கவின் கலை ஆணையம் 24 கரட் தங்க நாணயத்தில் கைகளைக் குவித்தபடி மேஜையில் சாய்ந்த கோணத்தில் டிரம்ப் இருக்கும் உருவத்தைப் பொறிக்க ஒப்புதல் அளித்துள்ளதாம். எனினும், அந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்படாது என்று அமெரிக்க கருவூலர் பிராண்டன் பீச் தெரிவித்தார்.

இந்த நிலையில், டிரம்ப்பின் முயற்சி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தேச மாண்புகளுக்கு எதிரானதாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.

அவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே தங்கள் முகங்களை நாணயங்களில் பொறித்துக்கொள்வர். ஒருபோதும் ஜனநாயக தலைவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் தன் தடத்தைப் பதிவு செய்ய டிரம்ப்பின் மற்றொரு முயற்சியாக மேற்கண்ட நடவடிக்கை அமையவுள்ளது என்ற விமர்சனப் பார்வையும் டிரம்ப் மீது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.