விவசாயத் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நியமனங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான முன்னுரிமை வழங்கப்படும் என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
‘தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கும் மாகாண நிகழ்ச்சித்திட்டத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது. விவசாயத் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நியமனங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான முன்னுரிமை வழங்கப்படும்.
அத்துடன் ஒப்பந்த அடிப்படையிலாவது வெற்றிடங்களை நிரப்பிச் சேவைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.