இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாக தொடர் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போரால் மிகப் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போர் தொடங்கி இரண்டாவது மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாததால் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளன.
போர் தொடங்கிய மறுநாளே ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை தலைவர் அலி லரிஜானி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி படுகாயமடைந்த நிலையில் அவர் பலியானதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் மூடப்பட்டதற்கும், அங்கு கடலுக்கடியில் கண்ணி வெடிகளைப் பதித்து கப்பல்களை மறித்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாகவும் டங்சிரி இருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடற்படைத் தளபதி பலியானது பற்றி ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் கடலோரப் பாதுகாப்பு படைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார். எங்களின் எதிரி முற்றிலுமாக அழிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இங்குள்ள அனைத்து வீரர்களும் டங்சிரி (கடற்படை தளபதி) தான். அடுத்து வரும் நாள்கள், மாதங்களில் அவர்கள் என்னென்ன ஆச்சரியங்களைக் கொண்டு வருவார்கள் எனப் பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்து எதிரிகளுக்குக் கடுமையான பதிலடியை வழங்குவோம் என டங்சிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1980-1988 ஈரான், ஈராக் போரின் முக்கிய படைவீரராக இருந்த அலிரெஸா டங்சிரி ராணுவத்தில் மிக நீண்ட நாள்கள் பணியாற்றிய முக்கிய வீரராவார்.
இவரைக் கடந்த 2018 ஆம் ஆண்டில் கடற்படை தளபதியாக மறைந்த ஈரான் உச்ச தலைவர் கமேனி நியமித்திருந்தார்.
இவரது தலைமையில் ஈரான் கடற்படை மிகவும் வலுப்பெற்றது. சமீப ஆண்டுகளில் பல வெளிநாட்டு கப்பல்களை ஈரான் கடற்படை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டங்சிரி மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல முக்கிய தலைவர்களைக் கொன்றதாகக் கூறும் அதே வேளையில் ஈரான் அதிலிருந்து மீண்டு வந்து தொடர்ந்து பதிலடி கொடுப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.