இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்
அரசியல் நோக்கத்துடன் மருத்துவர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்க உள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது.
எந்தவொரு விசாரணையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கத்துடனும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் காலை 8 மணி முதல் நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவர்களின் இடமாற்றத்திற்காக தனிப்பட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், இதற்கு முன்பு இத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதால் இது சந்தேகத்திற்குரியது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும், நோயாளிகளுக்கு அவசியமான சேவைகள் பாதிக்கப்படமாட்டாது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியளித்துள்ளது.