இலங்கையில் தொடர் துயரம்; நான்கு நாட்களில் 20 பேர் பலி
நாட்டில் புத்தாண்டு காலத்தில் கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீச்சல் தெரியாமை, ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுதல் மற்றும் மதுபோதையில் நீரில் இறங்குதல் ஆகியவையே இத்தகைய மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகும்.
பொதுமக்கள் நீராடுவதற்கு முன்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
உயிர்காப்புப் பிரிவினர் (Life Guards) பணியில் இருக்கும் இடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், அங்குள்ள எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் இவ்வாறான அனர்த்தங்கள் அதிகரித்துள்ளதால், நீர்நிலைகளில் இறங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.