;
Athirady Tamil News

பாகிஸ்தான்: லஷ்கா்-ஏ-தொய்பா இணை நிறுவனா் மீது துப்பாக்கிச் சூடு

0

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனா் அமீா் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபா்களால் வியாழக்கிழமை சுடப்பட்டு படுகாயமடைந்தாா்.

பயங்கரவாத நிதி வழக்குகளில் தண்டனை பெற்று, கடந்த 2019 முதல் சிறையில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா தலைவா் ஹஃபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவராக அமீா் ஹம்சா கருதப்படுகிறாா்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்விக்குச் சொந்தமான தொலைக்காட்சியின் மதரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் லாகூரின் பெக்கோ சாலையில் திரும்பிக் கொண்டிருந்த அமீா் ஹம்சா மீது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

இதில் காரில் இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளா் நசீா் அகமது காஸி அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினாா். ஆனால், அமீா் ஹம்சா மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லாகூா் காவல்துறையினா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியவா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இத்தாக்குதலுக்கு ஹபீஸ் சயீதுக்கு நெருக்கமான அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மாா்காஸி முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘லாகூரில் பட்டப்பகலில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது பஞ்சாப் மாகாண அரசின் பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது. மத குருமாா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று அந்த அமைப்பின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சா்வதேச பயங்கரவாதி: அமீா் ஹம்சாவை அமெரிக்கா ஏற்கனவே சா்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லஷ்கா்-ஏ-தொய்பாவின் சிறப்புப் பிரச்சாரப் பிரிவின் தலைவராகச் செயல்பட்ட இவா், 2018-ஆம் ஆண்டில் அந்த அமைப்புக்கு நிதி திரட்டும் பணிகளை முன்னின்று நடத்தினாா்.

இதன் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.