;
Athirady Tamil News

இரண்டு மாத ரகசிய சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் நெதன்யாகு

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (76), தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்கான சிகிச்சைகளை ரகசியமாக மேற்கொண்டு தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது வருடாந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட போதே அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிந்திருந்தாலும், அந்தத் தகவலை ஈரான் தனது பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடும் என்பதால், அதனை வெளியிடாமல் தாமதித்ததாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பரில் புரோஸ்டேட் வீக்கத்திற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்த சோதனைகளில், அவரது புரோஸ்டேட் பகுதியில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான சிறிய அளவிலான புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு அவர் கதிரியக்க சிகிச்சையை தொடங்கினார்.

தற்போது அந்தச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. “கடவுள் அருளால் நான் நலமாக இருக்கிறேன்.

அந்தப் புற்றுநோய் பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டது” என நெதன்யாகு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவரது மருத்துவர்களும் இது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் எவ்வித பாதிப்பும் இன்றி குணப்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமரான நெதன்யாகு, கடந்த காலங்களில் பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளை எதிர்கொண்டுள்ளார்.

தற்போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தனது பணிகளைத் தொடர்வதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.