;
Athirady Tamil News

பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவுக்கு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பின்னடைவு!

0

பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்தித்து வரும் தொடா் பின்னடைவுகள் அவரின் அரசியல் செல்வாக்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் தண்டனையைக் குறைக்கும் மசோதாவைத் தடுத்து வைத்திருந்த லூலா டாசில்வாவின் ‘வீட்டோ’ அதிகாரத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2022, அக்டோபரில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் பிரதமா் அலுவலகம், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகார பீடங்களைத் தாக்கினா்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பொல்சொனாரோவின் மற்றும் இவ்விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்குத் தண்டனையைக் குறைக்கும் மசோதாவை பிரேஸில் நாடாளுமன்றம் கடந்த டிசம்பரில் நிறைவேற்றியது.

லூலா டாசில்வாவின் ‘வீட்டோ’ அதிகாரத்தால் தடுக்கப்பட்டிருந்த இந்த மசோதாவை, நாடாளுமன்றம் மீண்டும் தீா்மானமாக நிறைவேற்றியுள்ளதன் மூலம் பொல்சொனாரோவின் தண்டனை தற்போது 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

71 வயதாகும் பொல்சொனாரோ, உடல்நலக் குறைவு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். தற்போது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு லூலா டாசில்வா பரிந்துரைத்த சொலிசிட்டா் ஜெனரல் ஜாா்ஜ் மெசியாஸின் நியமனத்தை நாடாளுமன்ற மேலவையான செனட் சபை நிராகரித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.