;
Athirady Tamil News

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

0

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாடிகன் நகரத்தில் போப் பதினான்காம் லியோவை சந்தித்து உரையாடியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வாடிகன் நகரம் மற்றும் இத்தாலி நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று (மே 7) சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தில், வாடிகன் நகர தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் 14-ம் லியோவை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், இருவரும் தங்களுக்குள் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

ஏற்கெனவே, போப் லியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு, இருதரப்புக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ஆகியோரை ரூபியோ வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போப் லியோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இதனால், அமெரிக்க அமைச்சர் ரூபியோவின் இத்தாலி மற்றும் வாடிகன் நகர பயணம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான போரைக் கண்டித்து, போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்க மாட்டார் என அதிபர் டிரம்ப்பை போப் லியோ விமர்சித்திருந்தார்.

அதற்கு, தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து செய்யறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்தது பல்வேறு தரப்பினரிடம் கண்டனங்களைப் பெற்றது.

மேலும், போப் லியோவுக்கு எதிரான கருத்துகளுக்கு அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.