;
Athirady Tamil News

ரஷியா-உக்ரைன் இடையே முற்றும் மோதல்

0

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ரஷியா-உக்ரைன் இடையே மோதல் முற்றியுள்ளது.

உக்ரைன் முன்மொழிந்த போா்நிறுத்தத்தை ரஷியா நிராகரித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

கடந்த புதன்கிழமை இரவு மட்டும் உக்ரைனின் 347 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியாஅறிவித்துள்ளது. இதேபோல், ரஷியாவிலிருந்து ஏவப்பட்ட 92 ட்ரோன்களை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தின.

மாஸ்கோவை நோக்கி வந்த உக்ரைன் ட்ரோன்களால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இப்போரில், உக்ரைன் நடத்திய 2-ஆவது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியின் வீழ்ச்சியைக் குறிக்கும் ரஷியாவின் மிக முக்கியமான வெற்றி தினக் கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க உக்ரைன் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, மாஸ்கோவில் நடைபெறவுள்ள பாரம்பரிய ராணுவ அணிவகுப்பில் இம்முறை ராணுவத் தளவாடங்கள் இடம்பெறாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் நிறுத்தவில்லை. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் அதே பாணியில் பதிலடி கொடுக்கும்’ என எச்சரித்தாா்.

பாதுகாப்பு கோரும் ‘பால்டிக்’ நாடுகள்: ரஷிய எல்லையையொட்டிய லாத்வியா மீது உக்ரைன் ட்ரோன்கள் தவறுதலாக விழுந்து வெடித்தது.

ரஷிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட 2 ட்ரோன்கள் திசைமாறி லாத்வியாவுக்குள் விழுந்ததில், 4 எண்ணெய் கிடங்குகள் சேதமடைந்தன. தொடா்ந்து எல்லைப்பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

இச்சம்பவத்தையடுத்து, பால்டிக் பிராந்தியத்தில் ‘நேட்டோ’ படைகளின் வான்பாதுகாப்பு அரணை பலப்படுத்த லாத்வியா, லிதுவேனியா நாடுகள் வலியுறுத்தின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.