;
Athirady Tamil News

இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு ; இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் விளக்கமளித்தார்.

புதிய விதிமுறைகளின்படி, தெரிவு செய்யப்பட்ட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் தங்கியிருப்பதற்கான இலவச விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பஹ்ரைன், ஈரான், இஸ்ரேல், கஸகஸ்தான், குவைத், நேபாளம், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவுதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது. இதேவேளை கட்டணம் அறவிடப்படாவிட்டாலும், மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது உட்பட ஏனைய அனைத்து குடிவரவு நடைமுறைகளையும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த இலவச விசா திட்டத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் மூலம் மேலதிகமாக 2,47,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக 317 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படுவதுடன், இறுதியில் நாட்டிற்கு 242 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய இலாபம் கிடைக்கும் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.