இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற பணமோசடியை இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குழுக்கள் ஏன் கண்டறியத்தவறின என்பது குறித்து பொது நிதி மீதான நாடாளுமன்றக்குழு மத்திய வங்கித்தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
இக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
NDB வங்கியின் பங்கு விலை வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் உள்ளகத்தணிக்கை திணைக்களம்,வெளித்தணிக்கை நிறுவனம், இயக்குநர் குழுவின் தணிக்கைக்குழு மற்றும் வங்கி மேற்பார்வை குழு ஆகியவை பணமோசடியை கணடறிய தவறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மோசடியானது, NDB வங்கியின் பங்கு விலை வீழ்ச்சியையும் அதன் தரமதிப்பீடுகளையும் நேரடியாகப் பாதித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கிகளின் உள்ளகக்கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள் மற்றும் தணிக்கைக் குழுக்களின் கடமைத் தவறுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மோசடி நடந்த நேரத்தில் இருந்த தணிக்கைக் குழு, தங்களையே விசாரித்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டிருப்பது சிக்கலானது என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நவீன தொழில்நுட்ப அமைப்புகள் அறிமுகம்
மேலும், அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான ஒரு குறைந்தபட்ச தொழில்நுட்பத் தரம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கவும், ஒட்டுமொத்த வங்கித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீன தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளின் மோசடி அமைப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான விதிமுறைகளை வெளியிடுவதில் மத்திய வங்கி கவனம் செலுத்தி வருவதாகவும், இதுகுறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.