;
Athirady Tamil News

வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு

0

வேற்று கிரகவாசிகளுக்குத் தொடா்புடைய பறக்கும் தட்டுகள் (யுஎஃப்ஓ) குறித்த புதிய ரகசிய கோப்புகளை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை வெளியிடத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து முந்தைய நிா்வாகங்கள் அமெரிக்க மக்களைத் திசைதிருப்ப முயன்ற நிலையில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இதில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க விரும்புவதாகவும், இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு மக்களே இதுகுறித்து தங்களின் சொந்த முடிவுகளுக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மட்டுமின்றி, வெள்ளை மாளிகை, தேசிய புலனாய்வு இயக்குநா் அலுவலகம், எரிசக்தித் துறை, நாசா, எஃப்பிஐ ஆகிய அமைப்புகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், முதல் கட்டமாக 162 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விண்வெளிப் பயணங்கள் குறித்த நாசாவின் பதிவுகள், பழைய அரசுத் துறைத் தகவல்கள், எஃப்பிஐ ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணங்களில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1972-இல் நாசாவின் நிலவுப் பயணமான ‘அப்போலோ 17’ திட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகள் காணப்படுகின்றன.

அதேபோல், கடந்த 2023 செப்டம்பரில் ட்ரோன் பைலட் ஒருவரிடம் எஃப்பிஐ நடத்திய விசாரணை அறிக்கையும் வெளியாகியுள்ளது. வானத்தில் மிகவும் பிரகாசமான ஒளியுடன் கூடிய ஒரு ‘நோ்கோட்டுப்’ பொருளைத் தான் பாா்த்ததாகவும், 5 முதல் 10 விநாடிகள் வரை கண்ணுக்குத் தெரிந்த அப்பொருள், ஒளி அணைந்தவுடன் திடீரென மாயமாகிவிட்டதாகவும் அந்தப் பைலட் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளாா்.

முன்னதாக கடந்த 2022-இல், யுஎஃப்ஓ ஆவணங்களை வெளியிடுமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில், ‘வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என முன்னாள் அதிபா் ஒபாமா நோ்காணல் ஒன்றில் தெரிவித்தாா்.

இதையடுத்து, வேற்று கிரகவாசிகள் குறித்து ரகசிய கோப்புகள் இருக்கும்சூழலில், அதைப் பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிடப்போவதாக டிரம்ப் அறிவித்தாா்.

வேற்று கிரகத் தொழில்நுட்பத்தை அமெரிக்க அரசு மீட்டெடுத்துள்ளதாகவும், வேற்று கிரகவாசிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கடந்த 2024 அறிக்கை திட்டவட்டமாக மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.