டென்வர் விமான நிலையத்தில் அதிர்ச்சி விபத்து ; பாதுகாப்பை மீறி ஓடுபாதை க்குள் நுழைந்த நபர் உயிரிழந்தார்
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதைக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், புறப்பட தயாராக இருந்த விமானம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில், பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி ஓடுபாதைக்குள் நுழைந்த அந்த நபர், 17L ஓடுபாதையை கடக்க முயன்றபோது Frontier Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் நபர் ஒருவர் மோதியதை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து என்ஜினில் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நேரத்தில் விமானத்தில் 224 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் இருந்த நிலையில், அனைவரும் அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றும் பணியின் போது 12 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோதிய நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும், அவர் விமான நிலைய ஊழியர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.