;
Athirady Tamil News

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

0

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று எதிர்ப்பு தெரிவித்து  சாய்ந்தமருது பகுதி மீனவர்கள்  படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பொராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது  பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு பாதிக்கப்பட்டது.

“எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” போன்ற கோசங்களை வெளியிட்டு மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் தெரிவிக்கையில், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சிலர் சட்டவிரோதமான முறையில் மீன்களை சூறையாடுவதால், உள்ளூர் மீனவர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், பல முறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து கடல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக தலைமையிலான  பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.