ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி, ஆன்லைன் கல்வி – மோடி கோரிக்கை
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தல், ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு மாற பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதனால் பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏரளாமான சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது, பள்ளி கல்லூரிகளை இணைய வழியில் நடத்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இது கிட்டத்தட்ட கொரோனா காலத்தில் இருந்த லாக்டவுன் போன்ற சூழலை நினைவுபடுத்துகிறது.
தற்போது இந்திய பிரதமர் மோடியும் இது போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார்.
மோடி கோரிக்கை
ஞாயிற்றுக்கிழமை தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
வீட்டிலிருந்து வேலை செய்தல், இணையவழி சந்திப்புகள் ஆகியவற்றுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வெளிநாட்டுப் பயணத்தை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது ஒத்திவைக்க முடிவு செய்ய வேண்டும். ஒரு ஆண்டுக்குத் தங்கம் வாங்கக் கூடாது என்று நாம் உறுதியெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் வதோராவில் பேசிய மோடி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இரண்டிலும் காணொளிக் கூட்டங்களுக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஏற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், “தற்போதைக்கு இணையவழி வகுப்புகளை ஏற்பாடு செய்வதற்கு சில பள்ளிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதில் நாம் எவ்வாறு ஒற்றுமையாக இருந்தோமோ, அதேபோல் இந்த நெருக்கடியையும் நாம் சந்தேகமின்றி வென்றுவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “பிரதமரின் வேண்டுகோளை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என நம்புகிறேன்.
ஒரு நிறுவனமாக, நாங்கள் கடந்த சில மாதங்களில் ‘அலுவலகத்திலிருந்து வேலை’ முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டோம், ஆனால் இப்போது ‘வீட்டிலிருந்து வேலை’ முறையை மீண்டும் பரிசீலிப்போம்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கமான NITES, தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதைக் கட்டாயமாக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.