காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம்; சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்
தெல்தெனியாய பிரதேசத்தில் காரில் மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 43 வயதுடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் இந்த கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பொலிஸாரின் விசேட குழுவொன்று தேடுதல் நடவடிக்கை
பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, வாலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபரான தம்பதியினர் நேற்று (24) நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கு உடந்தையாக இருந்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரைக் கைது செய்வதற்காக நுவரெலியா பொலிஸாரின் விசேட குழுவொன்று தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.