போர் இன்னும் முடியவில்லை! – ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
ஈரான் உடனான போர் இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை எனக் கூறி இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் 3 வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடன் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் 80-க்கும் அதிகமான முக்கிய தளங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் என சர்வதேச அளவில் அச்சம் நிலவுகிறது. மேலும், ஈரானின் செயல்பாடுகளைக் கவனித்து வருவதாகவும், தங்களின் படைகள் தயார்நிலையில் இருப்பதாகவும் இஸ்ரேல் அரசு நேற்று (ஜூலை 9) தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், போர் இன்னும் முடியவில்லை என ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுபற்றி, இன்று அவர் கூறியதாவது:
“ஈரான் அரசு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்பதே இஸ்ரேலின் கொள்கையாகும். நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கும். போர் இன்னும் முடியவில்லை. மேலும், புதிய சவால்கள் நம் முன் உருவாகி வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். கமேனியின் இறுதிச்சடங்குகள் நேற்று வரை நடைபெற்று வந்த வேளையில் ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.