முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 13,768 கனஅடி தண்ணீர் சனிக்கிழமை இரவு முதல் வெளியேற்றப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை செவ்வாய்க்கிழமைக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஆர்எஸ் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். சனிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.57 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 49.452 டிஎம்சி. இதில் 19.535 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி. இதில் 17.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.