;
Athirady Tamil News

நேபாள பேரழிவுக்கு காரணம் என்ன? – நிபுணர்கள் புதிய தகவல்

0

காத்மாண்டு,

நேபாளம் பெருவெள்ளம்
நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை அடித்துச்சென்றுள்ள பெருவெள்ளத்துக்கான காரணம் பெரிய மர்மமாகவே நீடித்து வந்தது. முதலில் இது இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிகழ்ந்தது எனவும், பின்னர் பனி ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்றும் நிபுணர்கள் கூறியிருந்தனர்.

தற்போது இதில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து பாறைகள் மற்றும் சேறு-சகதியுடன் ரசுவா அருகே லாங்டாங் லிருங் பகுதியில் விழுந்தது. பின்னர் அது லெண்டே ஆறு வழியாக போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்து சிதைவுகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த வெள்ளமாக கீழ்நோக்கி பாய்ந்துள்ளது.

செயற்கைக்கோள் படங்கள் சுமார் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட பெரும் புவியியல் மாற்றங்களை காட்டியுள்ளன. அதில் சுமார் 0.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து பிரிந்திருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேபாள அரசின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டு உள்ளது.

நேபாள பேரிடர் மேலாண்மை மைய தலைவர் பிஷால் நாத் உப்ரெட்டி இதை தெரிவித்தார். எனினும் இந்த பேரிடரின் துல்லிய காரணத்தை கண்டறியும் பணிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.