;
Athirady Tamil News

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

0

ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை

சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.