;
Athirady Tamil News

கல்முனை முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் 16ஆவது இரத்ததான முகாம்

0
“இரத்ததானம் செய்வோம்; ஓர் உயிரைக் காப்போம்” என்ற உயரிய மனிதநேய நோக்குடன், கல்முனை பிராந்தியத்தில் இரத்ததானப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்முனை 08, தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் 16ஆவது இரத்ததான முகாம் இன்று (12) மஸ்ஜிதின் மேல் மாடியில் சிறப்பாக நடைபெற்றது.

மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். பாறூக் பிரதம அதிதியாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் கே.யு. வித்யா உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களும், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.ஐ. இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய மஸ்ஜிதின் உப தலைவர் எம்.எம். அப்துல் றஹ்மான், “இரத்ததானம் என்பது விபத்துகள், சத்திரசிகிச்சைகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோரின் உயிரைக் காப்பாற்ற உதவும் உன்னதமான மனிதநேயச் செயலாகும்” எனச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது, “மஸ்ஜித் என்பது வெறுமனே தொழுகைக்கான இடமாக மட்டுப்படுத்தப்படாமல், சமூக நலன் மற்றும் மனிதநேயப் பணிகளிலும் பங்களிக்க வேண்டிய முக்கியமான சமூக நிறுவனமாகும். உயிர்களைக் காப்பாற்றும் இப்பணியை எதிர்காலத்திலும் தொடர்வதற்கான அர்ப்பணிப்பு எமக்குள்ளது” எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். பாறூக், “வைத்தியசாலைகளில் இரத்தக் கையிருப்பைப் பேணுவதற்கு இவ்வாறான தொடர்ச்சியான முகாம்கள் பெரிதும் உதவுகின்றன. முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித் முன்னெடுத்து வரும் இச்சேவை மிகவும் பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்து, இரத்ததானம் வழங்கியோருக்கு நன்றியினைத் தெரிவித்தார்.

இவ் இரத்ததான முகாமின் நெறிப்படுத்தல் பணிகளை உப தலைவர்களான எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் ஏ.எம்.எம்.ஏ. அத்னான் ஆகியோர் மேற்கொண்டதுடன், இறுதியாக மஸ்ஜித் செயலாளர் கே.எல். சுபைர் நன்றியுரை நிகழ்த்தினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரளாகப் பங்கேற்று இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத் தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.