;
Athirady Tamil News

ஜோன்ஸ்டனின் சொத்து சேதம்: 2 பேருக்கு விளக்கமறியல் !!

0

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான, கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள “சிட்டி ஹோட்டல் கொழும்பு“ மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (25) கட்டளையிட்டார்.

கடந்த மே 9ஆம் திகதியன்று நடந்த வன்முறையின் போது, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொம்பனித்தெரு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கொழும்பு 02ஐச் சேர்ந்த மொஹமட் நபீல் ஹுசைன் மற்றும் மொஹமட் இர்பின் மொஹமட் பௌமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு -02இல் உள்ள சிட்டி ஹோட்டல் கொழும்புக்கு கடந்த 9ஆம் திகதி வருகை தந்த சுமார் 200 பேர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அந்த ஹோட்டலின் முகாமையாளர் மொஹமட் அஸ்பால் அர்பான், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த கொம்பனித்தெரு பொலிஸார் மேற்குறிப்பிட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.