;
Athirady Tamil News

ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார்..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய ஒற்றுமை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை தொடங்கி உள்ளார். கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை சென்ற ராகுல்காந்திக்கு, கட்சியினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தமிழக பயணத்தை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று உள்ளனர். கடந்த 15-ந் தேதி ஒரு நாள் ஓய்வு எடுத்த ராகுல்காந்தி அதன்பிறகு பாதயாத்திரையை தொடர்ந்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற அவர், நேற்று முன்தினம் சாலக்குடியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அங்கு ராகுல்காந்தி 2-வது முறையாக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஓய்வின்போது அவர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாடினார். ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு ராகுல்காந்தி இன்று காலை தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். பெரும்பாரா சந்திப்பில் இருந்து அவர் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ராகுல்காந்தியின் பாதயாத்திரை பகல் 10 மணிக்கு தோபே ஸ்டேடியம் சென்றடைந்தது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். மாலையில் தொடர்ந்து அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.