;
Athirady Tamil News

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்..!!

0

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 12-ந் தேதி ஒரே கட்டமாக அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இமாச்சல பிரதேசத்தில் 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றார். தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரு மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் குஜராத்துக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிடும் போது அதை உங்களுக்குச் சொல்வோம் என்று கூறினார்.

இந்நிலையில் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்படுவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாஜக மேலும் நலத் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பிரதமருக்கு அதிக அவகாசம் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் ஆச்சரியப்படுவதற்து ஒன்றுமில்லை என்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.