தேர்தல் முடிவை சரியாக கணிக்கும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் பரிசு- கர்நாடக டாக்டர் அறிவிப்பு!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மங்களூரு டாக்டர் நரேந்திர நாயக் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? கட்சி அல்லாதவர்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள்? எத்தனை பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கு பதில்களை சரியாக கணித்து கூறும் ஜோதிடர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்போவதாக அவர் தெரிவித்து உள்ளார். அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் அளிப்பவர்கள் பரிசுக்கு தகுதி பெறுவார்கள். பல வருடங்களாக ஜோதிடர்களுக்கு கேள்விகள், பரிசுகள் என்று சவால் விட்டு வரும் டாக்டர் நரேந்திர நாயக், 2009-ஆம் ஆண்டு 25 கேள்விகள் கொண்ட சவாலை தொடங்கி ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார். 1976-ல் தட்சிண கன்னட விசாரவாதி சங்கத்தை நிறுவினார்.
மக்களிடையே அறிவியல் உணர்வை வளர்க்கும் வகையில் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். 9 மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறன் படைத்த இவர் மங்களூரு கஸ்தூரபா மருத்துவக் கல்லூரியின் உயிர் வேதியியல் துறையில் விரிவுரையாளராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இதுபற்றி அவர் கூறுகையில், மக்களிடம் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் அறிவியல் உணர்வை வளர்ப்பதே எனது நோக்கம். ஜோதிடமும் ஒரு அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டால் நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ்க்கை அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும், எதிர்காலம் உருவாக வேண்டும் என்றார்.