;
Athirady Tamil News

பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் இந்தியா – ஆஸி. இடையேயான உறவின் வலுவான அடித்தளம்: சிட்னியில் பிரதமர் மோடி பேச்சு!!

0

சிட்னியில் இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும், அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இந்திய வம்சாவளிகள்’ என புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடி தனது 3 நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். சிட்னியில் உள்ள குடோஸ் வங்கி அரங்கில் நேற்று அவர் இந்தியா வம்சாவளிகள் மத்தியில் உரையாற்றினார்.

இதில், அரங்கம் முழுவதும் குவிந்த 21,000 இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவை வரையறுக்கும் முன்பு 3சி-க்கள் இருந்தன. அவை, காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி (இந்திய உணவு). அதன்பிறகு அது 3டி-க்கள் ஆகின. அவை, ஜனநாயகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் தோஸ்தி (நட்புறவு). பின்னர் 3இ-க்கள் ஆகின. அது, எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் கல்வி. ஆனால் இந்த சி, டி, இ-ஐ தாண்டி இருதரப்பு உறவின் உண்மையான ஆழம், நம்பிக்கை. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும்தான். அதற்கான பின்னணியில் உள்ள உண்மையான காரணம், புலம்பெயர்ந்த இந்தியர்கள்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் தூரம் அதிகம் இருந்தாலும், இந்திய பெருங்கடல் நம்மை இணைக்கிறது. இரு நாடுகளிலும் வித்தியாசமான வாழ்க்கை முறைகள் இருந்தாலும், யோகா நம்மை இணைக்கிறது. கிரிக்கெட், நம்மை பல ஆண்டுகளாக இணைக்கிறது. இப்போது டென்னிஸ் மற்றும் திரைப்படங்கள் மற்ற இணைப்புப் பாலங்களாக உள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் போட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அவ்வளவு ஆழமான நட்பு மைதானத்திற்கு வெளியே உள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறந்தபோது, லட்சக்கணக்கான இந்தியர்கள் வருத்தமடைந்தனர்.

இப்போது, உலகப் பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியாவை சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கருதுகின்றன. கொரோனா சமயத்தில் தடுப்பூசி தயாரிப்பது போன்ற மிகவும் சவாலான காலகட்டத்திலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் திறமைக்கும், வளங்களுக்கும் குறைவில்லை. இன்று, உலகின் அதிகமான மற்றும் இளமையான திறமையாளர்களை கொண்ட நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 6 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று டெல்லி வந்தடைகிறார்.

* ஹாரிஸ் பூங்காவில் லிட்டில் இந்தியா
சிட்னியின் பாராமட்டாவில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் இந்தியர்கள் தீபாவளி மற்றும் ஆஸ்திரேலியா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இரு நாட்டு நட்புறவின் அடையாளமாக இப்பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என பெயர் சூட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசும் இணைந்து ஹாரிஸ் பூங்காவில் லிட்டில் இந்தியா நுழைவாயில் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டினர். மேலும், இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகம் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

* மோடி எங்கு சென்றாலும் பிரமாண்ட வரவேற்பு கிடைக்கும்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பேசுகையில், ‘பிரதமர் மோடி எங்கு சென்றாலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைக்கும்’ என புகழ்ந்தார். இதைத் தொடர்ந்து தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.