ஸ்பெயினில் அதிவிரைவு ரயில்கள் மோதல்: 21 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் காயம்
ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவிரைவு ரயில் மற்றொரு ரயில் மீது மோதியதில் 21 பேர் பலியாகினர்.
ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டு எதிரே வந்த மற்றொரு ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தடம்புரண்ட முதல் ரயிலில் பயணம் செய்த லூகாஸ் மெரியாகோ கூறுகையில், “இது ஒரு திகில் படம் போல இருந்தது” என்றார். விபத்தைத்தொடர்ந்து மேட்ரிட் மற்றும் அண்டலுசியா இடையிலான ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவ மேட்ரிட், செவில்லி, கோர்டோபா, மலகா மற்றும் ஹுவெல்வா ஆகிய ரயில் நிலையங்களில் பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அடிஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு சுமார் 40 அவசரகால ராணுவப் படை வீரர்களையும், 15 வாகனங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.