;
Athirady Tamil News

தரம் ஆறு கல்வி மறுசீரமைப்பு குழுவுக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்!

0

தற்போது தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, சர்சைக்குள்ளாகிய நிலையில் பிற்போடப்பட்டுள்ள பாடத்திட்ட – கல்வி மறுசீரமைப்பு குறித்த, சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான திட்டவரைபை முன்மொழிவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வழங்கிய வழிகாட்டல்களின் அடிப்படையில், பாடத்திட்ட – கல்விச் சீர்திருத்தப் பணிகளை முன்னெடுக்கவென விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமரின் ஆலோசனையின் படி, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரங்கள் சபைத் தலைவர் பேராசிரியர் பிரியங்கனி சேனநாயக்க தலைமையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரங்கள் சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி உபாலி மாம்பிட்டிய, முன்னாள் உறுப்பினரும், கொழும்புப் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மொஹமட் மஹீஸ் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் பத்மசிறி ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.