;
Athirady Tamil News

நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்ன வள்ளுவர்: வவுனியாவில் சர்வதேச திருக்குறள் மாநாடு!

0
நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்துக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துக்களை, தற்காலக் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினையுண்டு’ என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை, வள்ளுவர் அன்றே, ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற குறளின் மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளார். நாம் ஒருவருக்குத் துன்பம் இழைத்தால், அது நிச்சயம் நமக்கே திரும்பி வரும் என்ற வாழ்வியல் உண்மையை அறிவியல் பூர்வமாக அவர் அன்றே எடுத்துரைத்துள்ளார்.
மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதைத் தௌ;ளத் தெளிவாகக் கூறும் நூல் திருக்குறள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் வகுத்த பாதை மிக அழகானது. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்று அவர் கூறியது போல, அறநெறியில் நின்று வாழும் மனிதன், வானுலகில் உள்ள தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்படுவான். இத்தகைய உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறளைப் படித்து, அதன்படி நடப்பவர்கள் வாழ்வில் சகல நலங்களையும் பெறுவார்கள்.
இத்தகைய பெருமைமிகுந்த திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் நடைபெறுவது எமக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. இம்மாநாடு இங்கு நடைபெறுவதற்குக் காரணமான வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் பாராட்டுக்குரியவர். அவர் பல்கலைக்கழகத்தை சமூகத்துடன் ஒன்றிணைத்து பயணிக்கும் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றார். அவர் தனது பெயரைப் போலவே ஒரு ‘அற்புதமான’ மனிதராகச் செயற்படுகின்றார்’ என ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றத்தின் பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பாஞ்.இராமலிங்கம், சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. மாவை.சோ.தங்கராசா, முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40 இற்க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.