பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!
பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 36 பேர் பலியான நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும், தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவராக 32 வயதான யாசிர் என்பவர் அடையாளம் காணப்படுகிறார்.
மசூதியின் வாயிலில் தன்னைத் தடுத்த பாதுகாப்புப் படையினரைத் தாக்கிவிட்டு, மசூதியின் உள்சென்று, யாசிர் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.