கடைக்குள்ளேயே மர்மநபரால் கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
இன்று (11) காலை சம்பவம் நடந்த போது கடைக்குள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் பலத்த காயமடைந்திருந்த பெண்ணை உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில், குறிப்பிட்ட கடையின் பின்புற பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு, கடைக்குள் வந்து சோதித்தபோது, நபர் ஒருவர் கடைக்குள் இருந்து உடனடியாக வெளியேறி தப்பியோடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.