;
Athirady Tamil News

வங்காளதேசத்தில் வருகிற 17-ந்தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு

0

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 12-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடந்தது

இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது.

இதனால், அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் சேரவுள்ளது. வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், தாரிக்கின் புதிய அமைச்சரவை வருகிற 17-ந்தேதி பதவியேற்க உள்ளது. வங்காளதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இந்த முறை ஜனாதிபதி அரண்மனைக்கு பதிலாக, தேசிய நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசா பகுதியில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஷிரின் ஷர்மீன் சவுத்ரிக்கு பதிலாக, தலைமை தேர்தல் ஆணையாளர் நசீர் உத்தீன் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அந்நாட்டில் இருந்து வரும் பத்திரிகைகள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதற்கான விழாவில் தெற்காசிய தலைவர்களை அழைப்பது பற்றியும் வங்காளதேச தேசியவாத கட்சியினர் ஆலோசனை செய்து வருகின்றனர். எனினும், பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.