;
Athirady Tamil News

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்: நாவிதன்வெளி தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவசர கோரிக்கை

0

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டுமென நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

​மழையினால் முளைக்கும் நெல்மணிகள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்துறை இன்று பெரும் சிதைவைச் சந்தித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.

பெரும் சிரமத்திற்கு மத்தியில் அறுவடை செய்யப்பட்டு, உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் ‘டித்வா’ புயல் மற்றும் பருவப் பெயர்ச்சி மழையினால் தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்.
​தனியார் ஆலைகளின் விலைச்சுரண்டல்

​மறுபுறம், நெல் கொள்வனவில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளைத் திட்டமிட்டுச் சுரண்டி வருகின்றனர். “தற்போது நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, மூன்று மூடை நெல்லை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரமே தனியார் ஆலைகள் கொள்வனவு செய்கின்றன. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்” என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இந்த நஷ்டம் காரணமாக, அடுத்த சிறுபோகச் செய்கைக்குத் தேவையான மூலதனம் இல்லாமலும், விதை நெல்லைக் கொள்வனவு செய்ய முடியாமலும் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

​அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

​விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்:
​ஈர நெல் கொள்வனவு: உலர்ந்த நெல்லைப் போன்றே, மழையினால் பாதிக்கப்பட்ட ஈர நெல்லையும் அரசாங்கம் நியாயமான விலையில் கொள்வனவு செய்ய வேண்டும்.
​நேரடி நட்டஈடு: காட்டு யானைத் தாக்குதல்கள் மற்றும் வெள்ளத்தினால் பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு விரைவாக வழங்கப்பட வேண்டும்.
​நிரந்தரத் தீர்வு: ஒவ்வொரு பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப, விவசாயப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலான நிரந்தரத் திட்டங்களை ஜனாதிபதியும் விவசாய அமைச்சும் இணைந்து வகுக்க வேண்டும்.

​நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என அந்த அறிக்கையில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.