யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட வலி. வடக்கை சேர்ந்த நபர் , ஒருவர் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக நாங்கள் எங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகிறோம்.
36 வருடங்களுக்கு மேலாகியும் எமது சொந்த இடங்களில் மீள் குடியேற முடியாத நிலைமையில் உள்ளோம். எனது பெற்றோர் இல்லாத காலத்தில் எனது காணிகளை அடையாளம் காட்ட யாரும் இருக்க போவதில்லை. அவர்களின் ஆசை கூட தமது சொந்த காணியில் இறுதி காலத்தை வாழ்வதே..
எனவே எமது காணிகளை எம்மிடமே மீள கையளியுங்கள். தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வந்தால் , நாம் போராடி தான் எமது காணிகளை பெற வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் , பலாலி கிழக்கு பகுதியில் பெருமளவான பகுதிகள் இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் சில பகுதிகள் மாத்திரமே , இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அதனையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனூடாக பலாலி கிழக்கு முழுவதும் கையளிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் போது, வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கான கட்டடம் எவ்வித அனுமதிகளும் இன்றி கட்டப்பட்டு வருகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுமான பணிகளை உடன் நிறுத்த பணிப்பதாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.