;
Athirady Tamil News

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! – இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

0

ஈரான் விவகாரத்தில் ஆதரவளிக்காததால் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 அன்று தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனால், இருதரப்புக்கும் இடையில் வெடித்த போரில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரானிய படைகள், ஹோர்முஸ் நீரிணையை முடக்கின.

இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான போரில் தங்களுக்கு ஆதரவளிக்காத பல்வேறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகக் கருதப்படும் இத்தாலி பிரதமர் மெலோனியை புதன்கிழமை (ஏப். 15) அன்று அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்; ஆனால், தப்பு கணக்கு போட்டுவிட்டேன் எனவும், ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பது ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆபத்து என்பது அவருக்கு கவலையில்லை எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இத்தாலி பிரதமரின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறி, சிசிலியில் உள்ள விமானத் தளத்தை அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்துவதற்கு இத்தாலி பிரதமர் மெலோனி அனுமதி மறுத்தார்.

மேலும், தெற்கு லெபனானில் ஐ.நா. அமைதிப்படைப் பிரிவின் ஒரு பகுதியான இத்தாலிய படையினரின் வாகனங்கள் மீது இஸ்ரேலிய படைகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை பிரதமர் மெலோனி நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.