நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கள விஜயம்
கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அம்பாரை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமாராச்சி,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முனாசிர், கணக்காளர் பாரிஸ், மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி. R.நிறோஜன் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குழு புதன்கிழமை (22) நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு நேரடியாக வருகை தந்திருந்தனர்.
இதன்போது, இந்த நிர்மாணப்பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கத்தினுடைய முழுப்பங்களிப்பையும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் என்ற வகையில் தாம் இந்த நிந்தவூர் மக்களுக்கு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவத்தார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லதீப், பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சம்சுன் அலி ,இப்திகார் மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ,பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஆகியோரின் செயலாளர்கள் , இணைப்பாளர்கள் ,பிரஜா சக்தியின் நிந்தவூர் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
