கன்னிப் பயணமாக இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற அதிநவீன சொகுசு கப்பல்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘மெயின் ஷிப் 6’ என்ற அதிநவீன சொகுசு சுற்றுலாத் தூதுவராலயக் கப்பல், தனது கன்னிப் பயணமாக நாட்டை வந்தடைந்துள்ளது.
மால்டா நாட்டின் கொடியுடன் பயணிக்கும் இந்த மாபெரும் சொகுசுக் கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக நங்கூரமிட்டுள்ளது.
முக்கிய மைல்கல்
இந்த ஆடம்பரக் கப்பலில் 2,380 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், அவர்களுக்குச் சேவையாற்றுவதற்காக 951 அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, உள்நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் இணைந்து பாரம்பரிய கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக வரவேற்றன.
கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பாக, இந்தச் சொகுசுக் கப்பல் கடந்த 19 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குச் சென்றிருந்தது.
தங்களின் தென்னிலங்கை விஜயத்தின் போது, இந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகள் யால, புந்தல மற்றும் உடவலவ ஆகிய தேசிய பூங்காக்களுக்குச் சென்று இலங்கையின் வனவிலங்கு வளங்களை ரசித்ததுடன், கதிர்காமம் வரலாற்றுப் புண்ணிய பூமி உள்ளிட்ட முக்கிய பண்பாட்டு அடையாளங்களையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சொகுசுக் கப்பலின் வருகையானது இலங்கையின் சுற்றுலாத்துறையின் எழுச்சிக்கு மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.