திருமண நிகழ்வில் மோதல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியலில்
ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, முறுகலில் ஈடுபட்ட குழுவினர் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் இன்று (22) சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சரணடைந்தனர். குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் (06) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீட்டர் போல் உத்தரவிட்டார்.
பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நால்வர்
சம்பவம் நடந்த நாள் முதல் சந்தேகநபர்கள் பொலிஸாரை புறக்கணித்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 சந்தேக நபர்களை திம்புலபத்தனை பொலிஸார் இதற்கு முன்னர் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தேக நபர்களை ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் தலா 50,000 ரூபாய் தனிநபர் சரீரப் பிணையில் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் (06) ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர் மீது குற்றவியல் பலப்பிரயோகம் செய்தல், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், பொது இடத்தில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் மற்றும் கலகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக திம்புலபத்தனை பொலிஸாரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.