;
Athirady Tamil News

9 மாத குழந்தையை கட்டி வைத்து ஈவிரக்கமின்றி தாக்குதல்; பொலிஸார் அதிரடி

0

9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா சில்வா உத்தரவிட்டுள்ளார். புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தையின் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தங்கியிருந்த லக்ஷித துஷார தனஞ்சய பெரேரா என்ற நபரே, இவ்வாறு புறக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மனைவியையும் குழந்தையையும் ஒப்படைத்து சென்ற கணவன்
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் ஆவார். அரசாங்கத்தில் பொறுப்பான உயர் பதவிகளை வகிக்கும் தம்பதியரின் மகளான இவர், வேலையற்ற ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்.

வறுமை காரணமாக, தம்பதியினர் இருவரும் தங்களது குழந்தையுடன் வேலை தேடிச் சில நாட்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளனர். புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தையின் பழைய பேருந்து நிலையத்திலுள்ள 21 ஆம் இலக்கக் கடை அறையில் தங்கியிருந்த இந்தச் சந்தேகநபரிடம், தனது மனைவியையும் குழந்தையையும் தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு, அக்குழந்தையின் தந்தை வேலை தேடிச் சென்றுள்ளார்.

எனினும், அவர் சென்று 3-4 நாட்களாகியும் இதுவரை திரும்பவில்லை. இக்காலப்பகுதியில், தாய்க்கும் குழந்தைக்கும் உணவளித்து அந்த அறையிலேயே சந்தேகநபர் தங்க வைத்துள்ளார்.

குழந்தை அடிக்கடி அழுததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், கடந்த 21 ஆம் திகதி குழந்தையை நாற்காலியில் அசைய முடியாதவாறு கட்டிவைத்து, குடையின் இரும்புக்கம்பியால் இரக்கமின்றித் தாக்கியுள்ளார். இதற்கு முந்தைய நாள் இரவும் இக்குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாகக் குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரக் காட்சியைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து ‘பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு’ இரகசியத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் படுபாதகக் குற்றத்தைச் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பொலிஸார், அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.

பாதிக்கப்பட்ட குழந்தையைச் சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ‘சிறுவர் நன்னடத்தைப் பாதுகாப்புப் பிரிவில்’ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். நீதிமன்றத்தில் சந்தேகநபர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.