வவுனியாவில் கன்றுத்தாச்சி பசுவை திருடி இறைச்சிக்காக விற்பனை: சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது!
கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா – மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பசு ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, மாமடுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மேய்ச்சலிற்காக அந்தப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கட்டியிருந்த பசுவை, சந்தேக நபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்கள் இறைச்சிக்காக அந்தப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றிற்கு அதனை விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட லொறி வண்டியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.