காங்கோவில் 3,200ஐக் கடந்த எபோலா பாதிப்பு! 1,437 பேர் பலி!
காங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,262-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு இத்துரி மாகாணத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் பரவல், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 3,262 பேரில் 1,437 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவலின்படி,
2018-2020 காலகட்டத்தில் காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா பரவல் சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இதில் 3,400-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகின.
தற்போதைய பரவல் மிக வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் வேகத்தை விட அது பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.