சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானம்
பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டு நடவடிக்கை
தேசிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டத்திற்கு அமைவாக, சம்மாந்துறை முகைதீன் மாவத்தை வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றிச் சுத்தம் செய்யும் விசேட சிரமதான நடவடிக்கை இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை ஒருங்கிணைப்பு செய்திருந்தன.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வீதியோரங்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய சூழலைக் கொண்ட பற்றைக்காடுகள் அகற்றப்பட்டுச் சூழல் முழுமையாகச் துப்பரவு செய்யப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.சி.எம். நயீம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம். றம்சின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிரமதானப் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் தேவையான வழிகாட்டல்களையும் வழங்கினர்.
