யேமனில் சௌதி-ஹௌதி மோதல்! 2 வாரங்களில் 1 லட்சம் பேர் இடம்பெயர்வு!
யேமனில் நடைபெறும் உள்நாட்டு மோதலால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 1.12 லட்சம் மக்கள் அந்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில் கடந்த சில வாரங்களாக சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து, யேமனில் உள்ள முக்கிய தளங்களை ஹௌதிகள் கைப்பற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக சௌதிக்கு எதிரான நடவடிக்கைகளை ஹௌதிகள் மேற்கொண்டதால், சனா நகர விமான நிலையத்தின் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், யேமனில் நடைபெறும் உள்நாட்டு மோதலால் அந்நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1,12,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் அவையின் இடம்பெயர்வு முகமை அறிவித்துள்ளது.
இதில், சுமார் 3000 பேர் யேமனில் இருந்து கடல் வழியாகப் பயணம் செய்து அண்டைய நாடான ஜிபூட்டியில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், 10,000 அகதிகள் அங்கு வரக்கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஜிபூட்டி அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவின் மீது ஹௌதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக சௌதி அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என ஹௌதிகள் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.